தயவுசெய்து குணமடைந்து வாருங்கள் எஸ்பிபி மாமா: தமன் உருக்கம்

தயவுசெய்து குணமடைந்து வாருங்கள் எஸ்பிபி மாமா என்று இசையமைப்பாளர் தமன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

பின்பு தீவிர சிகிச்சையால் கொஞ்சம் கொஞ்சமாக சகஜநிலைக்கு திரும்பினார். வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு எஸ்பிபி-யின் உடல்நலம் தேறியது. இதனிடையே, திடீரென்று நேற்று (செப்டம்பர் 24) அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் தங்கள் சமூகவலைதள பக்கங்களில் எஸ்பிபி குணமைடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எஸ்பிபி-காக பிரார்த்தனை செய்யுமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"என்னுடைய அன்புக்குரிய மாமா எஸ்பிபி அவர்களுடன் ஊரடங்குக்கு முன்னால் எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த வீடியோவை பார்த்ததும் என்னுடைய கண்ணீரைத் தடுக்க முடியவில்லை. தயவுசெய்து குணமடைந்து வாருங்கள் மாமா. கடுமையாகப் பிரார்த்தனை செய்வோம் நண்பர்களே, நீங்கள் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் விரும்புகிறேன்"

இவ்வாறு இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE