எனக்காக நீங்கள் பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி - எஸ்பிபி குணமடைய சல்மான் கான் வாழ்த்து

By செய்திப்பிரிவு

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

அதற்குப் பிறகு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகச் சகஜ நிலைக்கு திரும்பி வந்தார். வாய் வழியாகச் சாப்பிடும் அளவுக்கு அவருடைய உடல்நிலை தேறியது. இதனால், திரையுலகினர், ரசிகர்கள் அனைவருமே மகிழ்ச்சியடைந்தார்கள்.

எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் திடீரென்று நேற்று (செப்டம்பர் 24) அவருடைய உடல்நிலை மோசமடைந்ததாகவும், கவலைக்கிடமாக உள்ளதாகவும் எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இது அவரது ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பிபியை நேரில் சென்று பார்த்த நடிகர் கமல்ஹாசன், அவர் நலமாக இருக்கிறார் என்று கூறமுடியாது என்று வேதனை தெரிவித்துள்ளார். இதனால் பலரும் தங்கள் சமூகவலைதள பக்கங்களில் எஸ்பிபி குணமைடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது சமூக ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பாலசுப்ரமணியம் சார்.. நீங்கள் விரைந்து குணமடைய அனைத்து வலிமைகளும் கிடைக்க என்னுடைய இதயத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துகிறேன். எனக்காக நீங்கள் சிறப்பாக பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி, உங்கள் தில் தீவானா ஹீரோ பிரேம், லவ் யூ சார்

இவ்வாறு சல்மான் கான் கூறியுள்ளார்.

90களில் சல்மான் கான் பாலிவுட்டில் அறிமுகமான புதிதில் அவரது படங்களில் பெரும்பாலான பாடல்களை பாடிவர் எஸ்பிபி என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE