டீன் ஜோன்ஸின் மரணச் செய்தி அறிந்து அதிர்ந்து நிலைகுலைந்து போய்விட்டேன்: ஆர்.ஜே.பாலாஜி

டீன் ஜோன்ஸின் மரணச் செய்தி அறிந்து அதிர்ந்து நிலைகுலைந்து போய்விட்டேன் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தற்போது ஐபிஎல் டி20 போட்டிகளுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தளத்தில் வர்ணனையாளராகப் பணியாற்றி வந்தார். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று நாளேடுகளில் கிரிக்கெட் தொடர்பாகக் கட்டுரைகள் எழுதும் பணியையும், வர்ணனையாளர் பணியையும் ஜோன்ஸ் செய்துவந்தார்.

ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர் பணிக்காக மும்பையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஜோன்ஸ் தங்கி இருந்த நிலையில், இன்று (செப்டம்பர் 24) அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரைச் சிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனளிக்காமல் ஜோன்ஸ் உயிரிழந்தார்.

ஐபிஎல் வர்ணனையில் ஜோன்ஸ் உடன் இணைந்து பணிபுரிந்து வந்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. அவருடைய மறைவு குறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"டீன் ஜோன்ஸின் மரணச் செய்தி அறிந்து அதிர்ந்து நிலைகுலைந்து போய்விட்டேன். நேற்றிரவு ஒன்றாக ஒரே காரில் பயணித்தோம். இது உண்மைதான் என்று இப்போதும் நம்ப முடியவில்லை. வாழ்க்கை இவ்வளவு நிலையற்றதா? உங்களின் இழப்பால் வாடுவேன்."

இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE