அரசாங்கத்தை எதிர்த்துச் சண்டையிடவில்லை; வலிமையும் இல்லை என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு பாலிவுட்டில் பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ளன. இவரது மரணம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் தொடங்கிய விசாரணையில், பல முன்னணி நடிகர்கள் போதை மருந்து பயன்படுத்தி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும், இது தொடர்பாக கங்கணாவின் குற்றச்சாட்டுகளும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அப்போது, அவருடைய படத்துக்கு வந்த ஒளிப்பதிவு வாய்ப்பைத் தவிர்த்தார் பி.சி.ஸ்ரீராம். இதனை ட்விட்டர் தளத்தில் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இதனிடையே, தற்போது "மக்களின் கவனச்சிதறலுக்காக பாலிவுட் மீது குறி வைக்கப்படுகிறதா" என்ற விவாதத்தை நடத்தவுள்ளதாக ஒரு தனியார் தொலைக்காட்சி விளம்பரம் செய்தது.
இந்த விளம்பரத்தை மேற்கோளிட்டு பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இது நம்பப்பட வேண்டுமென்றால், நாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். நம் மவுனம் நமது பலவீனமாக எப்போதும் பார்க்கப்படக்கூடாது. நாங்கள் இங்கே அரசாங்கத்தை எதிர்த்துச் சண்டையிடவில்லை, எங்களுக்கு அதற்கான வலிமையும் இல்லை. நாங்கள் அனைவரும் அழகான, ஆரோக்கியமான இந்தியாவைக் கனவு காண்கிறோம்".
இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.