'லூசிஃபர்' ரீமேக்: இயக்குநரை உறுதி செய்த சிரஞ்சீவி

By செய்திப்பிரிவு

'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக் இயக்குநரை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளார் சிரஞ்சீவி.

மலையாளத்தில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'லூசிஃபர்'. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது.

ஆனால், தெலுங்கில் வெளியாகவில்லை. இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் ராம்சரண். மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிப்பது உறுதியாது. இந்த ரீமேக்கை முதலில் 'சாஹோ' இயக்குநரான சுஜீத் இயக்குவார் என்று தகவல் வெளியானது. ஆனால், சில மாதங்களிலேயே அவருக்குப் பதிலாக வி.வி.விநாயக் இயக்குவார் என்று செய்தி வெளியானது.

தற்போது, 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை வி.வி.விநாயக் இயக்கவுள்ளதை சிரஞ்சீவி உறுதிப்படுத்தியுள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு சுஜித் தன்னைச் சந்தித்து, 'லூசிஃபர்' ரீமேக்கில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதால் படத்திலிருந்து விலகுவதாகத் தெரிவித்ததாகவும், அவருக்குப் பதிலாக வி.வி.விநாயக் இயக்குவார் என்றும் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை ராம்சரண் மற்றும் என்.வி.பிரசாத் இணைந்து தயாரிக்கவுள்ளனர். 'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கை முடித்துவிட்டுத்தான் 'லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக்கைத் தொடங்க சிரஞ்சீவி திட்டமிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE