ரூ.30 கோடி கொடுக்கவில்லையென்பதால் பொய்யான புகார் - நவாசுதீன் மனைவிக்கு ஷமாஸ் நவாப் கண்டனம்

By ஐஏஎன்எஸ்

பாலிவுட்டின் பிரபல நடிகராக இருப்பவர் நவாசுதீன் சித்திக். ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’, ‘ராமன் ராகவ் 2.0’, ‘ரயீஸ்’, ‘போட்டோகிராஃப்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். நவாசுதீனுக்கும் அவரது மனைவி ஆலியாவுக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலியா நவாசுதீனிடமிருந்து விவாகரத்து கோரியிருந்தார். மேலும் நவாசுதீன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் மும்பை போலீஸில் புகாரளித்திருந்தார்.

இந்நிலையில் ஆலியாவின் இந்த புகாரை நவாசுதீனின் சகோதரர் ஷமாஸ் நவாப் சித்திக் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நான் தப்பித்து ஓடிவிடவில்லை. நான் என்னுடைய அடுத்த பட வேலைகளுக்காக சென்றிருந்தேன். என் மீதும் என் சகோதரர் நவாசுதீன் சித்திக் மீதும் அளிக்கப்பட்ட போலியான புகார்களுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தை நாடவுள்ளோம்.

நீங்கள் விரும்பினால் எங்களுக்கு எதிராக 10 அல்லது 12 புகார்களை வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் நான் என்னுடைய 2.16 கோடி ரூபாயை உங்களிடமிருந்து எப்படி மீண்டும் பெறுவது என்று எனக்கு தெரியும்? உங்களுடைய 30 கோடி ரூபாய் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றாததற்கான தண்டனைதான் என் குடும்பம் மீதான இந்த போலி புகார்கள்.

இவ்வாறு ஷமாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE