அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் ஷாரூக் கான் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'பிகில்' படத்தைத் தொடர்ந்து, இந்தியில் உருவாகவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார் அட்லி. பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தைத் தயாரித்து, நாயகனாக நடிக்கவுள்ளார் ஷாரூக் கான். இதற்கான பணிகளைத்தான் நீண்ட நாட்களாகக் கவனித்து வருகிறார் அட்லி.
தற்போது இந்தப் படத்தில் ஷாரூக் கான் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. துப்பறிவு அதிகாரியாகவும், கிரிமினலாகவும் நடிக்கவுள்ளார் என பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ள புதிய படத்தில் முதலில் நடிக்கவுள்ளார் ஷாரூக் கான். அதை முடித்தவுடனே, அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதில் ஷாரூக் கானுக்கு நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
'சங்கி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஷாரூக் கான் - தீபிகா படுகோன் இருவரும் இணைந்து 4-வது முறையாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.