'மாஸ்டர்' நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால் ஏப்ரல் வெளியீட்டிலிருந்து 'மாஸ்டர்' பின்வாங்கியது.
தற்போது 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடலாம், அதற்குள் கரோனா அச்சுறுத்தல் எல்லாம் குறைந்து சகஜநிலை திரும்பும் எனப் படக்குழு காத்திருக்கிறது. இதனிடையே, தயாராகியுள்ள பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்தப் பட்டியலில் அவ்வப்போது 'மாஸ்டர்' பெயர் இடம்பெறும். ஆனால், படக்குழுவினரோ ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை என்றே பதிலளித்து வந்தார்கள். தற்போது கோயம்புத்தூரில் விஜய் ரசிகர் மன்றத்தினர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
» பாயல் கோஷ் புகார்: அனுராக் காஷ்யப் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
» பட வாய்ப்புக்காகவே ஆதரிக்கின்றனர்: அனுராக் ஆதரவு நடிகைகளைச் சாடிய பாயல் கோஷ்
அப்போது அளித்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பதாவது:
"ஓடிடி தளத்தில் 'மாஸ்டர்' வெளியாக வாய்ப்பில்லை. திரையரங்கில்தான் வெளியாகும். திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியவில்லை. தமிழக அரசிடம் அது தொடர்பாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் 'மாஸ்டர்' எப்போது வெளியீடு என்பது குறித்த அறிவிப்பு வரும்.
'மாஸ்டர்' வெளியீட்டுத் தேதிக்காக நானும் ஆர்வமாகக் காத்துக் கொண்டிருக்கிறேன். ஏப்ரலில் வெளியிடத் திட்டமிட்டு இருந்தோம். கோவிட் பிரச்சினையால் வெளியிட முடியாமல் போய்விட்டது. அந்தப் படம் எப்போது வந்தாலும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கும்".
இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.