பாயல் கோஷ் புகார்: அனுராக் காஷ்யப் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

By ஐஏஎன்எஸ்

பாயல் கோஷ் புகாரைத் தொடர்ந்து அனுராக் காஷ்யப் மீது முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது, பாயல் கோஷ் மீடூ குற்றச்சாட்டை முன்வைத்தார். 2014-ம் ஆண்டு தன் முன் ஆடைகளைக் களைந்து நின்றதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாகவும் பாயல் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு எதிராக நடிகை பாயல் கோஷ் வெர்ஸோவா காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.

பாயல் கோஷின் வழக்கறிஞர் நிதி சட்புதே தனது ட்விட்டர் கணக்கின் மூலம் முதல் தகவல் அறிக்கையின் விவரங்களைப் பகிர்ந்திருந்தார். செவ்வாய்க்கிழமை இரவு இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

"பாலியல் பலாத்காரம், முறையின்றிக் கட்டுப்படுத்தி வைத்தல், சிறைபிடித்து வைத்தல் மற்றும் பெண்ணின் கண்ணியத்துக்குக் கேடு விளைவித்தல் ஆகிய குற்றங்களின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டம் 376(1), 354, 341, 342 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளிக்கு எதிராக முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டது" என்று சட்புதே ட்வீட் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE