'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது.
'தர்பார்' படத்தைத் தொடர்ந்து, சிவா இயக்கத்தில் உருவாகும் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வந்தார் ரஜினி. ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
இதுவரை 50% படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்துள்ளது. கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்துவிட்டாலும், இன்னும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
இதனிடையே, கரோனா பரவல் குறைந்தால் மட்டுமே ரஜினி படப்பிடிப்புக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளார் என்றெல்லாம் தகவல் வெளியானது. இதனால், திட்டமிட்டபடி 'அண்ணாத்த' வெளியாகாது என்றும் தெரிவித்தார்கள்.
» 'ஜோசப்' ரீமேக்கான 'விசித்திரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
» க்வான் நிறுவனத்துடன் தொடர்பா? - சல்மான் கான் வழக்கறிஞர் விளக்கம்
ஆனால், அனைத்துச் செய்திகளையும் பொய்யாக்கும் விதமாக 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்காக ஹைதராபாத்தில் ஏற்கெனவே போடப்பட்ட அரங்குகள் இப்போது என்ன சூழலில் உள்ளன என்பதைப் பார்த்துச் சரிசெய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக ஒட்டுமொத்தக் குழுவினரிடமும் தேதிகள் வாங்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து நடிகர்களிடமும் கரோனா அச்சுறுத்தல் இல்லாமல் தற்காத்துத் தனிமையில் இருக்கும்படி கேட்டுள்ளனர். ரஜினி எப்போது படப்பிடிப்பில் பங்கேற்பார் என்பதைப் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.
இதர காட்சிகள் அனைத்தையும் முடிப்பதற்கு ஒரு மாதம் தேதிகள் கொடுத்துள்ளார் ரஜினி. குறைந்த படக்குழுவினருடன் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அதற்கு எப்படித் தயாராகலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது 'அண்ணாத்த' படக்குழு.