போதைப் பொருள் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள க்வான் நிறுவனத்துக்கும், நடிகர் சல்மான் கானுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்று அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
சுஷாந்த் சிங் மரண வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சுஷாந்த் சிங்கின் நண்பர்கள், மேலாளர், காதலி ரியா, ரியாவின் சகோதரர் ஆகியோரிடம் போதை தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் சுஷாந்தின் காதலி ரியாவையும், அவரது சகோதரர் ஷௌவிக்கையும், சுஷாந்தின் தனிப்பட்ட உதவியாளர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட ஒரு சிலரையும், போதை மருந்தை வாங்கியது மற்றும் எடுத்துச் சென்ற குற்றங்களுக்காக போலீஸார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை சூடு பிடித்துள்ளது.
திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ், க்வான் திறன் மேலாண்மை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி த்ருவ் சிட்கோபேகர் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் த்ருவ் சிட்கோபேகர் மட்டுமே போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார் முன் ஆஜரானார் என்றும், கரிஷ்மா பிரகாஷ் ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் க்வான் திறன் மேலாண்மை நிறுவனத்தில் நடிகர் சல்மான் கானும் ஒரு பங்குதாரர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. சில ஊடகங்களில் இது செய்தியாகவும் வெளியானது. பலரும் இந்தத் தகவலைக் குறிப்பிட்டு சல்மான் கானைக் கடுமையாகச் சாடி வந்தனர்.
இந்தத் தகவலுக்கு சல்மான் கானின் வழக்கறிஞரான ஆனந்த் தேசாய் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''க்வான் திறன் மேலாண்மை நிறுவனத்தில் நடிகர் சல்மான் கான் ஒரு பங்குதாரர் என்ற தவறான செய்தி சில ஊடகங்களில் வெளியானது. க்வான் அல்லது அதன் கிளை நிறுவனங்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சல்மான் கானுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். சல்மான் கான் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்''.
இவ்வாறு சல்மான் கானின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.