அப்பா சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்: எஸ்பிபி சரண்

By செய்திப்பிரிவு

அப்பா நலம் பெறுவதற்கான நிலையை நோக்கி தொடர்ந்து சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குத் திரும்பி வருகிறது. மருத்துவமனை அறிக்கை தவிர்த்து அவருடைய மகன் எஸ்பிபி சரணும் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்து ட்வீட்களும், வீடியோக்களும் வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்று (செப்டம்பர் 22) எஸ்பிபி சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"அப்பா நலம் பெறுவதற்கான நிலையை நோக்கி தொடர்ந்து சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார். வாய்வழி திரவங்களுடன் எக்மோ/ வெண்டிலேட்டர், பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. விரைவில் மருத்துவமனையிலிருந்து வெளியேற அவர் ஆவலாக உள்ளார்"

இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE