'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்பு தொடங்கியது

மோகன்லால் நடிப்பில் உருவாகும் 'த்ரிஷ்யம் 2' படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் 'த்ரிஷ்யம்' தான் என்பது குறிப்பிடத்தக்கது.

'த்ரிஷ்யம்' படத்துக்குப் பிறகு மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி 'ராம்' படத்தில் இணைந்து பணிபுரிந்தது. ஆனால், கரோனா ஊரடங்கினால் திட்டமிட்டப்பட்டி வெளிநாடு படப்பிடிப்புக்குச் செல்ல முடியவில்லை. 'ராம்' படத்தில் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் தான் திட்டமிடப்பட்டன.

தற்போது, 'ராம்' படத்துக்கு முன்னதாக மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி இணைப்பில் 'த்ரிஷ்யம் 2' அறிவிக்கப்பட்டது. முழுக்க கேரளாவிலேயே படமாக்க திட்டமிடப்பட்டது. நேற்று (செப்டம்பர் 21) படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

மோகன்லால் இல்லாத காட்சிகளைப் படமாக்கி வருகிறது படக்குழு. விரைவில், அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். 'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலுக்கு நாயகியாக நடித்த மீனாவே இதிலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE