இந்த 20 வருடங்களில் இயக்குநர் அனுராக் காஷ்யப் யாரையும் காயப்படுத்தியதில்லை என்று இயக்குநர் ராம்கோபால் வர்மா கூறியுள்ளார்.
இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு எதிராக நடிகை பாயல் கோஷ் முன்வைத்துள்ள மீடூ குற்றச்சாட்டு விவகாரத்தில் இயக்குநர் ராம்கோபால் வர்மா அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.
"எனக்குத் தெரிந்த அனுராக் காஷ்யப் மிகவும் உணர்ச்சிகரமான நபர். அவரைத் தெரிந்து வைத்துள்ள இந்த 20 வருடங்களில் அவர் யாரையும் காயப்படுத்தியதை நான் பார்க்கவோ, கேள்விப்பட்டதோ இல்லை. எனவே இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே எனக்குப் புரியவில்லை" என்று ராம்கோபால் வர்மா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாயல் கோஷின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகப் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இயக்குநர்கள் ஹன்ஸல் மேத்தா, வாசன் பாலா, அனுபவ் சின்ஹா, நடிகைகள் டாப்ஸி, டிஸ்கா சோப்ரா, சுர்வீன் சாவ்லா, அனுராக்கின் முன்னாள் மனைவிகள் ஆர்த்தி பஜாஜ், கல்கி கொச்சிலின் ஆகியோரும் அனுராக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.