மிகவும் மலிவான உத்தி: அனுராக் காஷ்யப் மீதான புகாருக்கு முன்னாள் மனைவி கண்டனம்

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார் என்றும் அவர் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தப் புகாரால் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, பாயல் கோஷ் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவியான ஆர்த்தி பஜாஜ் அனுராக் காஷ்யப்புக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்த்தி கூறியுள்ளதாவது:

நான் அவரது முதல் மனைவி, நீங்கள் ஒரு ராக்ஸ்டார் அனுராக், வழக்கம்போல தொடர்ந்து பெண்கள் முன்னேற்றத்துக்கு குரல் கொடுங்கள். அவர்களுக்காக பாதுகாப்பான இடத்தை உருவாக்குங்கள். அதை நம் மகள் விஷயத்திலேயே நான் பார்க்கிறேன். உலகில் நேர்மை மறைந்து, மூளையற்றவர்களும், தோற்றவர்களும் குரல் கொடுப்பவர்களின் ரத்தத்தை கேட்கின்றனர்.

அனைவரும் அடுத்தவர்களை வெறுப்பதற்காக செலவிடும் சக்தியை ஆக்கப்பூர்வமாக செலவிட்டால் உலகம் அழகான இடமாக இருக்கும். இப்போது இவர்கள் செய்வதுதான் நான் பார்த்ததிலேயே மலிவான உத்தி. முதலில் அது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் இது போலியாக கட்டமைக்கப்பட்டது என்பதால் நான் மிகவும் பலமாக சிரித்தேன். உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது குறித்து வருந்துகிறேன். அவர்கள் அவ்வளவுதான். நீங்கள் உயரத்தில் இருந்து தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். நாங்கள் உங்களை நேசிக்கிறோம்.

இவ்வாறு ஆர்த்தி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE