'பிசாசு 2' அதிகாரபூர்வ அறிவிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்க 'பிசாசு 2' திரைப்படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'சைக்கோ' படத்துக்குப் பிறகு 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்கினார் மிஷ்கின். அதில் விஷாலுடன் ஏற்பட்ட சண்டையால் அந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார். அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதைகளை எழுதி வந்தார்.

சிம்பு மற்றும் அருண் விஜய் ஆகியோருக்கு கதை ஒன்றைக் கூறினார். இருவருமே அதில் நடிக்கச் சம்மதம் தெரிவித்தாலும், எப்போது படப்பிடிப்பு என்பதே தெரியாமல் உள்ளது. இதனால், இடையே ஒரு படமொன்றை இயக்க திட்டமிட்டார் மிஷ்கின்.

இன்று (செப்டம்பர் 20) இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, மிஷ்கின் இயக்கத்தில் அடுத்ததாக 'பிசாசு 2' உருவாகவுள்ளது. 2014-ம் ஆண்டு பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் 'பிசாசு'. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது அதன் 2-ம் பாகத்தை அறிவித்துள்ளார் மிஷ்கின். இதில் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கவுள்ளார். மிஷ்கின் - கார்த்திக் ராஜா கூட்டணி இணையும் முதல் படமாக இது அமைந்துள்ளது. நவம்பரிலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE