விஷால் - ஆர்யா - ஆனந்த் ஷங்கர் கூட்டணி உறுதி

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது.

'நோட்டா' படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் ஆனந்த் ஷங்கர். இந்தக் கதையைக் கேட்டவுடன், விஷால் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அவரே தயாரிக்கவும் முடிவு செய்தார்.

இதில் ஆர்யாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். வெளிநாட்டுப் படப்பிடிப்பு, நடிகர்களின் சம்பளம் எனக் கணக்கிட்டபோது பட்ஜெட் அதிகமானதால் படத்தைக் கைவிட்டுவிட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், இந்தப் படம் கைவிடப்படவில்லை.

தற்போது தயாரிப்பாளர் மட்டுமே மாறியுள்ளார். இந்தப் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பரிலிருந்து படப்பிடிப்புக்குச் செல்ல, படக்குழு திட்டமிட்டுள்ளது. நாயகியாக ரீத்து வர்மா, இசையமைப்பாளராக தமன் பணிபுரியவுள்ளனர்.

தற்போது 'சக்ரா' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஆனந்த் ஷங்கர் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஷால். இந்தப் படத்தை முடித்துவிட்டுத்தான் 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்கி, நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

அதேபோல் பா.இரஞ்சித் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஆனந்த் ஷங்கர் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் ஆர்யா. 'அவன் இவன்' படத்துக்குப் பிறகு ஆர்யா - விஷால் இருவரும் இணைந்து நடிக்கும் படமாக இது அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE