'முந்தானை முடிச்சு' ரீமேக்: நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

'முந்தானை முடிச்சு' ரீமேக்கில் சசிகுமாருக்கு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

1983-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'முந்தானை முடிச்சு'. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் ஊர்வசி, தீபா, கே.கே.செளந்தர், 'பசி' சத்யா உள்ளிட்ட பலர் பாக்யராஜுடன் நடித்திருந்தனர்.

இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு 'முந்தானை முடிச்சு' படம் ரீமேக் ஆகிறது.

மே 20-ம் தேதி 'முந்தானை முடிச்சு' ரீமேக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை பாக்யராஜ் எழுதுகிறார். பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது.

இயக்குநர் மற்றும் ஊர்வசி கதாபாத்திரத்தில் யார் என்பதெல்லாம் அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் இயக்குநர் யார் என்பது முடிவாகவில்லை.

'முந்தானை முடிச்சு' ரீமேக்கை ஜே.எஸ்.பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது சசிகுமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2021-ம் ஆண்டு இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE