தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றி அதிகமான படங்கள் வரவேண்டும் - இயக்குநர் ஹன்ஸல் மேத்தா கருத்து

‘ஷாஹித்’ (2013), ‘சிம்ரன்’ (2017) உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஹன்ஸல் மேத்தா. ‘ஷாஹித்’ திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.

தற்போது ராஜ்குமார் ராவ் நடிப்பில் ‘சலாங்’ என்ற திரைப்படத்தை ஹன்ஸல் மேத்தா இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தன் பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த படங்கள் பாலிவுட்டில் அதிகமாக உருவாகவேண்டும் என்று ஹன்ஸல் மேத்தா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

சினிமாவிலும் சமூகத்திலும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த பார்வையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்களை பற்றி இன்னும் அதிகமான படங்களை நாம் எடுக்க வேண்டும். நம்மால் இயன்றளவு இந்த விஷயத்தை இயல்பானதாக மாற்ற வேண்டும்.

‘தோஸ்தானா’, ‘கபூர் அண்ட் சன்ஸ்’, ‘ஷுப் மங்கள் ஸ்யாதா சாவ்தான்’ என ஏராளமான படங்கள் தன் பாலின ஈர்ப்பாளர்களை பற்றி வந்துள்ளன. நிச்சயமாக இந்த கதைகள் காலத்தால் பரிணாமம் அடைந்துள்ளன. என்னை பொறுத்தவரை, தற்கால நடப்புகளை பற்றிய கதைகளையே சொல்ல முயற்சித்து வருகிறேன். திரைப்படங்களின் மூலமாக சமூகத்தை பிரதிபலித்தால் சிறப்பாக அமையும்.

இவ்வாறு ஹன்ஸல் மேத்தா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE