விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பை தீபாவளிக்குள் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வந்தபோது, கரோனா அச்சுறுத்தலால் பாதியிலேயே திரும்ப வேண்டிய சூழலுக்குப் படக்குழு தள்ளப்பட்டது.
மற்ற காட்சிகளைப் படமாக்க மீண்டும் ரஷ்யாவுக்குச் செல்ல வேண்டும். ஆனால், கரோனா அச்சுறுத்தலால் எப்போது அதற்கான சூழல் அமையும் என்பதே தெரியவில்லை. இதனால் இந்தப் படம் வெளியாகத் தாமதமாகும் என்று தகவல் வெளியானது.
தற்போது 'கோப்ரா' படக்குழுவினரோ திட்டத்தை மாற்றியுள்ளனர். இன்னும் படமாக்க வேண்டிய காட்சிகளைச் சென்னையிலேயே படமாக்குவது எனத் திட்டமிட்டுள்ளனர். ரஷ்யாவில் படமாக்க வேண்டிய காட்சிகளை, இங்குள்ள ஸ்டுடியோவில் க்ரீன் மேட் போட்டுப் படமாக்கி, கிராபிக்ஸ் செய்துவிடலாம் என முடிவெடுத்துள்ளனர்.
» நடுத்தர வர்க்கத்தை ஏன் சரியாகச் சித்தரிப்பதில்லை?- ஷ்ரத்தா ஸ்ரீநாத் கேள்வி
» இயக்குநர் விக்னேஷ் சிவன் பிறந்த நாள் ஸ்பெஷல்: படங்களாலும் பாடல்களாலும் வென்ற இளைஞர்
இதற்கான பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. தீபாவளிக்குள் ஒட்டுமொத்த 'கோப்ரா' படப்பிடிப்பையும் முடித்துவிடுவோம் என்று தயாரிப்பாளர் லலித் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கிராபிக்ஸ் பணிகளை முடித்து, அடுத்த ஆண்டு வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
பொங்கலுக்கு 'மாஸ்டர்' வெளியாவதால், கோடை விடுமுறைக்குத்தான் 'கோப்ரா' வெளியாகும் எனத் தெரிகிறது. ஏனென்றால், 'மாஸ்டர்' படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையும் லலித்திடம்தான் உள்ளது.