இரட்டை வேடங்களில் விஜய் சேதுபதி - டாப்ஸி

By செய்திப்பிரிவு

தீபக் சுந்தர்ராஜன் இயக்கி வரும் புதிய படத்தில் விஜய் சேதுபதி - டாப்ஸி இருவருமே இரட்டை வேடங்களில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் அனைவருமே இங்கேயே தங்கவைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதில் டாப்ஸி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடன் விஜய் சேதுபதி, ராதிகா, யோகி பாபு, மதுமிதா, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன். இவர் இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி - டாப்ஸி இருவருமே இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். ஒன்று தற்காலக் கதாபாத்திரமாகவும், இன்னொன்று சரித்திரக் கதாபாத்திரமாகவும் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதர காட்சிகள் அனைத்தையுமே படமாக்கி முடித்துவிட்டார்கள். இப்போது படப்பிடிப்பை முடித்துவிட்டாலும், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் இதன் பணிகள் முடிந்து வெளியாக நாளாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE