கமல் - லோகேஷ் கனகராஜ் படத் தலைப்பு விவகாரம்: படக்குழு மறுப்பு

By செய்திப்பிரிவு

கமல் - லோகேஷ் கனகராஜ் படத்தின் தலைப்பு குறித்து வெளியான தகவலுக்கு, படக்குழுவினர் மறுப்பு தெரிவித்தனர்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று (செப்டம்பர் 16) வெளியானது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் நாயகனாக நடிக்கவுள்ளார்.

கமல் நடிப்பில் உருவாகும் 232-வது படமாக இது அமைந்துள்ளது. டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2021-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படம் தொடர்பான தகவல்கள் வெளியாகும்போதே 'எவனென்று நினைத்தாய்' என்பதுதான் தலைப்பு எனத் தகவல் வெளியானது. இது தொடர்பாகப் படக்குழுவினர் அமைதி காத்தனர். நேற்று படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் கூட, படத் தலைப்பு குறித்து எந்தவொரு தகவலுமே இல்லை.

ஆனால், லோகேஷ் கனகராஜ் படம் தொடர்பாக ட்வீட் செய்யும்போது 'எவனென்று நினைத்தாய்' என்று குறிப்பிட்டு இருந்தார். உடனடியாக இதுதான் தலைப்பு என்று பலரும் குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டு வந்தனர். இதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இன்னும் படத்துக்கு எந்தவொரு தலைப்புமே இறுதி செய்யவில்லை என்றும், நடிகர்கள் - தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு எல்லாம் விரைவில் வெளியாகும் எனவும் படக்குழுவினர் குறிப்பிட்டனர்.

இப்போதைக்கு கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி படத்தின் இசையமைப்பாளராக அனிருத் மட்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE