விளிம்புநிலை மக்களை பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா?- பூஜா பட் கேள்வி

By ஐஏஎன்எஸ்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். விசாரணையில், அவரை யாரேனும் தற்கொலைக்குத் தூண்டியிருக்கலாம் அல்லது கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா உட்பட அவருக்கு நெருக்கமான சிலர் போதைப் பொருள் விற்பனைக் கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் தனியாக வழக்குப் பதிவு செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், ரியா, அவரது சகோதரர் சோவிக் உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி நடிகை பூஜா பட் கருத்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழும், தங்கள் வாழ்க்கையின் வலியை மறப்பதற்காக, போதை மருந்துகளைப் பயன்படுத்தும் மக்களைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா? உடைந்து போன மக்கள் தங்கள் கனவுகளை நோக்கி ஓடாமல் வறுமையால் போதைப் பொருட்களை நோக்கி ஓடுகிறார்கள். அவர்களது மறுவாழ்வில் யாருக்கேனும் ஆர்வம் உள்ளதா?

இவ்வாறு பூஜா பட் தனது பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக பாலிவுட்டில் எழுந்த வாரிசு அரசியல் சர்ச்சையில் நடிகை கங்கணா மற்றும் பூஜா பட் இடையே கருத்து மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE