சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பான விசாரணையில், பாலிவுட்டில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவது தெரிய வந்திருக்கிறது. இதுதொடர்பாக நடிகை ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில், மாநிலங்களவையில் பாஜக எம்.பி.யும், நடிகருமான ரவி கிஷண், இந்தி திரையுலகில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குற்றசாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சமாஜ்வாதி எம்.பியும் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், “ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகத்தின் நற்பெயரை கெடுக்கக் கூடாது” என்று கூறினார். ஜெயா பச்சனின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஜெயா பச்சன் பேசும்போது கங்கணாவின் பெயரைக் குறிப்பிடவில்லையென்றாலும், தொடர்ந்து வாரிசு அரசியல் மற்றும் போதை பொருள் விவகாரத்தில் கருத்து கூறிவரும் கங்கணா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
» சமூக வலைதளங்களில் மிரட்டல்; ஜெயா பச்சனுக்கு கூடுதல் பாதுகாப்பு: மகாராஷ்டிர அரசு வழங்கியது
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கணா கூறியுள்ளதாவது:
‘எந்த வாய்ப்பை பற்றி குறிப்பிடுகிறீர்கள் ஜெயா ஜி? ஹீரோவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டபின் இரண்டு நிமிட கதாபாத்திரங்களையும், ஒரே ஒரு பாடலையும், ஒரு ரொமாண்டிக் காட்சியையும் கொடுப்பதாக கூறியதே, அதை பற்றியா? திரைத்துறைக்கு நான் தான் பெண்ணியத்தை கற்றுக் கொடுத்தேன். நீங்கள் அல்ல.
இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.