பாலிவுட் திரையுலகத்துக்கு ஆதரவாக பேசியதற்காக சமூக வலைதளங்களில் மிரட்டல்கள் வந்ததால், சமாஜ்வாதி எம்.பி.யும், நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சனுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பான விசாரணையின் போது, பாலிவுட் திரையுலகில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவது தெரிய வந்திருக்கிறது. இதுதொடர்பாக நடிகை ரியா சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில், மாநிலங்களவையில் இதுதொடர்பான விவாதம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, பாஜக எம்.பி.யும், நடிகருமான ரவி கிஷண், இந்தி திரையுலகில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறினார்.
ரவி கிஷணின் இந்த பேச்சுக்கு, சமாஜ்வாதி எம்.பி. ஜெயா பச்சன் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், “ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகத்தின் நற்பெயரை கெடுக்கக் கூடாது” என்று கூறினார். ஜெயா பச்சனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் நேற்று விமர்சனங்கள் குவிந்தன. அதுமட்டுமின்றி, அவருக்கு கொலை மிரட்டல்களும் வந்ததாக கூறப்படுகிறது.
இதன்பேரில், மும்பையில் உள்ள ஜெயா பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோரின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பை மகாராஷ்டிர அரசு அதிகரித்துள்ளது.