கரோனா ஊரடங்கு வாழ்க்கையை ரசிக்கிறேன்: சோனாக்‌ஷி சின்ஹா ஒப்புதல்

இந்த ஊரடங்கு வாழ்க்கையை நான் ரசிக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்று சோனாக்‌ஷி சின்ஹா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்

கரோனா அச்சுறுத்தலால் சுமார் 150 நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னணி நடிகர்கள் யாருமே படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இறுதிகட்டப் படப்பிடிப்பு இருந்தால் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இந்தியத் திரையுலகம் முழுக்கவே இதே சூழல் தான் இருக்கிறது.

இதனிடையே, கரோனா ஊரடங்கு, அச்சுறுத்தல், படப்பிடிப்பு ஆகியவை குறித்து சோனாக்‌ஷி சின்ஹா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"இந்த ஊரடங்கு வாழ்க்கையை நான் ரசிக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். கடந்த 10 வருடங்களில் எனக்குச் சரியான ஓய்வு கிடைக்கவில்லை. எனக்கான நேரம் செலவிட, வாழ்க்கையில் எனக்கு என்ன வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள, எனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய, தனிமையில் செலவிட, மனக் குழப்பங்களைத் தெளிவுபடுத்த, வாழ்க்கையில் எது முக்கியம், எது முக்கியமல்ல என்பதைப் புரிந்து கொள்ள இப்போதுதான் நேரம் கிடைத்துள்ளது. எனவே நான் உண்மையிலேயே இதை ரசிக்கிறேன்.

மீண்டும் எப்போது பணி தொடங்கும், அது எப்படியிருக்கும் என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. என்ன தொடுகிறீர்கள், முகத்தைத் தொடாதீர்கள் என்ற எச்சரிக்கையோடு, அனைவரும் தனி நபர் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து மீண்டும் படப்பிடிப்புச் சூழலுக்குச் செல்வது கடினமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஒரு ஃபோட்டோஷூட் நடந்தது. நம்மைத் தவிர நம்மைச் சுற்றியிருக்கும் அனைவரும் தலைமுதல் கால் வரை மூடியிருப்பதைப் பார்க்கும் போது வினோதமாக இருந்தது. முகத்துக்கு கைகளைக் கொண்டு போகக் கூடாது, கைகளை அப்படியே வைத்திருக்க வேண்டும், ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் கிருமி நாசினி செலுத்த வேண்டும் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்வது வித்தியாசமாக இருந்தது.

அந்தக் கவலையை இப்போதைக்கு ஓரம் வைத்துவிட்டு, எனது கலை, என் ஓவியம், நண்பர்களுடன் அளவில்லா உரையாடல், குடும்பத்துடன் நேரம் செலவிடுவது என எனக்கு என்ன சந்தோஷம் தருகிறது என்பதை இந்தத் தருணத்தில் செய்கிறேன். இப்போது எல்லோரும் ஒரே படகில் இருக்கிறோம். அது எப்போது நகர வேண்டுமோ அப்போது நகரும்"

இவ்வாறு சோனாக்‌ஷி சின்ஹா கூறியுள்ளார்.

பல திரைப்படங்கள், வெப்சீரிஸைப் பார்த்துவிட்டதால் அது வெறுத்துப் போய்விட்டது என்று கூறியிருக்கும் சோனாக்‌ஷி, மீண்டும் டலாஷ் படத்தைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். "நான் மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்ததற்குக் காரணம், ரீமா காக்டியுடன் ஒரு நிகழ்ச்சியைச் செய்கிறேன். டலாஷ் எனக்கு மிகவும் பிடிக்கும். புத்தகம் படிக்க ஆசை தான் ஆனால் இப்போது அதற்கான பொறுமை இல்லை. நான் உடற்பயிற்சி செய்யும் போது ஏதாவது பார்த்துக் கொண்டே செய்வேன் இல்லையென்றால் உடற்பயிற்சி செய்வது பிடிக்காது" என்று சோனாக்‌ஷி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE