தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் 'சக்ரா' வெளியாகும் என்று விஷால் பேட்டியளித்துள்ளார்.
புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சக்ரா'. ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இன்னும் 7 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற வேண்டியுள்ளது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது படக்குழு. இதற்குக் காரணம் ஓடிடியில் படத்தை வெளியிடத் திட்டமிடுகிறார்கள் என்று தகவல் வெளியானது.
இந்தத் தகவல் வெளியான உடனேயே படக்குழு மறுப்பு தெரிவித்தது. தற்போது திரையரங்குகள் எப்போது திறக்கப்படும், படங்கள் எப்போது வெளியாகும் என்ற சூழலே தெரியாமல் உள்ளது. இதனால், தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் 'சக்ரா' வெளியாகும் என்று விஷால் பேட்டியளித்துள்ளார்.
இது தொடர்பாக பாலிவுட் ஊடகத்துக்கு விஷால் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"நாங்கள் ஓடிடி வெளியீட்டுக்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால், கண்டிப்பாக இந்த தீபாவளிக்கு 'சக்ரா' வெளியாகும். இன்னும் சில நாட்கள்தான் படப்பிடிப்பு மீதமுள்ளது. திரையரங்கில் தரும் அதே அன்பை அவரவர் வீட்டிலிருந்தும் என் ரசிகர்கள் தருவார்கள் என்று நான் நம்புகிறேன்".
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேட்டியின் மூலம், 'சக்ரா' ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. எந்த ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதை விஷால் உறுதிப்படுத்தவில்லை.