இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவுக்கு கரோனா தொற்று: நலமாக இருப்பதாகக் காணொலிப் பகிர்வு

இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திய திரைத்துறையில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பணியாற்றியுள்ளார்.

'ராஜ பார்வை', 'பேசும் படம்', 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'மகளிர் மட்டும்' என தமிழில், கமல்ஹாசானுடன் சேர்ந்து இவர் எடுத்திருக்கும் திரைப்படங்கள் அனைத்துமே இன்றும் பிரபலமானவை. வரும் 21-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், தற்போது தனக்கு கரோனா தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளார்.

"21-ஆம் தேதி என் பிறந்தநாள் குறித்துப் பேச பலர் என்னை தொடர்பு கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஊடகத்தைச் சேர்ந்தவர்களும் என்னைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் அழைப்பை என்னால் ஏற்க முடியவில்லை. ஏனென்றால் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகவும் லேசான அறிகுறிகள் தான் இருந்தன. சிடி ஸ்கேனிலும் தொற்றின் அளவு மிகக் குறைவாக இருப்பதாகவே தெரிய வந்துள்ளது. இப்போது வீட்டுத் தனிமையில் இருக்கிறேன்

தனி அறையில், எனக்கென தனியாக குளியலறை, கழிவறையோடு இருக்கிறேன். உணவை வெளியே வைத்துவிடுவார்கள். நான் எடுத்துக் கொள்வேன். எனது கல்லூரி விடுதி நாட்கள் நினைவுக்கு வருகிறது.

எல்லாம் நலமாகவே இருக்கிறது. 22-ம் தேதி வரை இந்த வீட்டுத் தனிமை நீடிக்கும். நான் இங்கு தனியே புத்தகங்கள் படித்து, திரைக்கதை வேலைகள் செய்து நேரம் கழிக்கிறேன். என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் அனைவருக்கும் நன்றி. என் பிறந்தநாளுக்காக எதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் நன்றி.

கோவிட்-19 என்பது தீவிரமான தொற்று. அனைவரும் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முகக் கவசம், சமூக விலகலை என எல்லாவற்றையும் பின்பற்ற வேண்டும். நான் எல்லாவற்றையும் பின்பற்றியும் எனக்கு தொற்று வந்திருக்கிறது.

ஆனால் மனித இனம் எப்போதுமே இது போன்ற நோய் தொற்றுகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. வரலாற்றில் எப்போதும் அப்படியே நடந்திருக்கிறது. எனவே அனைவரும் நலம் பெறுவோம். நன்றி” என சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இந்தக் காணொலிப் பகிர்வில் குறிப்பிட்டுள்ளார்.

தனது பிறந்தநாள் குறித்து பலர் தன்னை தொலைப்பேசியில் அழைத்து வருவதாகவும், அவர்களுக்கு தான் ஏன் பதில் சொல்லவில்லை என யாரும் நினைத்து விடக்கூடாது என்பதால் தான் இது குறித்துப் பகிர்வதாகவும் சிங்கீதம் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE