போதை மருந்து விவகாரம்: விவேக் ஓபராயின் உறவினர் இடங்களில் சோதனை

By ஐஏஎன்எஸ்

கன்னடத் திரைத்துறையில் போதை மருந்து கும்பல் குறித்து விசாரித்து வரும் மத்தியக் குற்றப் பிரிவு காவல்துறையினர், நடிகர் விவேக் ஓபராயின் மைத்துனர் ஆதியா அல்வாவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

ஆதித்யா அல்வா மறைந்த முன்னாள் அமைச்சர் ஜீவ்ராஜ் அல்வாவின் மகன். ஜீவ்ராஜ் மிகச் செல்வாக்கான, அதிகாரமிக்க அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். அவரது காலத்தில் முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டேவுக்கு வலதுகரமாகச் செயல்பட்டவர்.

போதை மருந்து தொடர்பாக நடிகை ராகினி வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது முதலே ஆதித்யா தலைமறைவாகிவிட்டார். ராகினி 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதித்யாவுக்குச் சொந்தமான ரிசார்ட்டுகளில் தற்போது சோதனை நடந்து வருகின்றது. இதில்தான் ஆதித்யா பல்வேறு கன்னட நட்சத்திரங்களுக்காக வார இறுதியில் பார்ட்டிகளை நடத்தியுள்ளார்.

ஆதித்யாவின் தாய் நந்தினி அல்வாவும் கர்நாடகத்தில் பிரபலமான நடனக் கலைஞர். 'பெங்களூரு ஹப்பா' என்கிற பெங்களூரு நகரக் கொண்டாட்டம் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தவர்களில் நந்தினியும் ஒருவர். எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது 'பெங்களூரு ஹப்பா' தொடங்கப்பட்டது. பெங்களூருவின் கலாச்சாரத் திறனைக் காட்டும் விழாவாக இது அமைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE