வாரிசு அரசியலைப் பற்றிய விவாதம் மிகைப்படுத்தப்பட்டுவிட்டது: இயக்குநர் அனுபவ் சின்ஹா

By ஐஏஎன்எஸ்

வாரிசு அரசியல் தொடர்பாகப் பரபரப்பாக நடந்து வரும் விவாதம், தேவையில்லாமல் மிகைப்படுத்தப்பட்டுவிட்டது என இயக்குநர் அனுபவ் சின்ஹா கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

பாலிவுட்டில் வாரிசு அரசியல் அதிகம், வாரிசுகளுக்கே வாய்ப்புகளில் முக்கியத்துவம் தரப்படுகிறது, அவர்களுக்கே முன்னுரிமை உள்ளது, பின்புலம் இன்றி துறைக்குள் வரும் திறமையானவர்களின் வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகின்றன. அதையும் மீறி வளரும் புதியவர்களை, வாரிசுகளும், வாரிசுகளை ஆதரிப்பவர்களும் ஓரங்கட்ட நினைக்கின்றனர். இப்படியான அரசியல், அது தந்த மன அழுத்தம் காரணமாகவே சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார் என சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் வெடித்தது.

இதுகுறித்துப் பேசியிருக்கும் 'ரா ஒன்', 'ஆர்டிகிள் 15', 'தப்பட்' உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் அனுபவ் சின்ஹா, "வாரிசு அரசியலைப் பற்றிய விவாதம் மிகைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆரம்பத்திலிருந்தே நான் சொல்லிக்கொண்டிருந்தது இதைத்தான். வாரிசு அரசியல் எல்லா இடங்களிலும் உள்ளது. வாரிசு அரசியல் என்கிற வார்த்தையைத் தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்கியுள்ளனர்.

திடீரென மாஃபியாக்கள் குறித்துப் பேசுகின்றனர். இந்தத் துறையில் நான் இந்த வார்த்தையை (இதற்கு முன்) பல முறை கேட்டதில்லை. ஆம், தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாய்ப்பு தருவது, துன்புறுத்துவது ஒவ்வொரு வியாபாரத்திலும் உள்ளது. நாம் அனைவரும் நம் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்து, தோழமையுடன் பணியாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE