கரோனா தொற்று: நடிகர் ஃப்ளோரன்ட் பெரேரா மரணம்

கரோனா தொற்று பாதிப்பால் நடிகர் ஃப்ளோரன்ட் பெரேரா மரணமடைந்தார். அவருக்கு வயது 67.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பொது மேலாளராகப் பணிபுரிந்தவர் ஃப்ளோரன்ட் பெரேரா. அப்போது கிடைத்த நட்பை வைத்து 'புதிய கீதை' படத்தில் நடிகராக அறிமுகமானவர். ஆனால், இவர் நடிகராக பரிச்சயமானது 'கயல்' படத்தின் மூலமே.

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'கயல்' படத்தில் ஆனந்திக்கு அப்பாவாக நடித்தார். பிரபு சாலமனுடனான நட்பால் அவருடைய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

'வேலையில்லா பட்டதாரி 2', 'தரமணி', 'தர்மதுரை' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்துவிட்டதால், அடுத்து நடிக்கவுள்ள படத்தின் கதாபாத்திரத்துக்காக உடைகள் வாங்கி பெரேரா ஆயத்தமாகி வந்தார்.

இதனிடையே, திடீரென காய்ச்சல் வரவே கரோனா பரிசோதனை செய்தபோது, அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பெரேராவின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் நேற்றிரவு (செப்டம்பர் 14) உயிரிழந்தார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE