ஆண்ட்ரியாவின் 'நோ என்ட்ரி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் 'நோ என்ட்ரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு புதிய படமொன்றில் நடித்து முடித்துள்ளார் ஆண்ட்ரியா. அந்தப் படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (செப்டம்பர் 14) வெளியிடப்பட்டுள்ளது.

'நோ என்ட்ரி' என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அழகு கார்த்திக் இயக்கியுள்ளார். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். 'நீயா 2' படத்தை தயாரித்த ஜம்போ சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது,

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க சிரபுஞ்சியைச் சுற்றியுள்ள காடுகளிலேயே படமாக்கியுள்ளது படக்குழு. அங்கு முழுக்க நடைபெற்றுள்ள ஒரு தமிழ் படத்தின் படப்பிடிப்பாக 'நோ என்ட்ரி' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் அழகு கார்த்திக் கூறியிருப்பதாவது:

"மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலைப்பிரதேசத்தில் இளம் தம்பதிகள் ஒரு சொகுசு இடத்தில் தங்குகிறார்கள். அங்கே மனிதர்களை வேட்டையாடும் 15 நாய்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த நாய்கள் பத்து சேர்ந்தால் ஒரு யானையையே வீழ்த்திக் கொன்று விடுமளவுக்குக் கொடூரமானவை. நர வேட்டையாடும் நாய்களிடமிருந்து தம்பதிகள் தப்பித்தார்களா இல்லையா என்பது தான் 'நோ என்ட்ரி' படத்தின் கதை"

இவ்வாறு இயக்குநர் அழகு கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் தைரியமாக நாய்களுடன் சண்டையிடும் காட்சியில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. மேலும், இதில் ரண்யா, மும்பை சாக்‌ஷி, ஜெயஸ்ரீ, சதீஷ், ஆதவ் கண்ணதாசன், டில்லி, கோகுல் 'மானாட மயிலாட' மானஸ் உள்ளிட்ட பலர் ஆண்ட்ரியாவுடன் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் முக்கிய காட்சிகளுக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட15 ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிரபுஞ்சியில் 45 நாட்கள் தங்கி முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்கரவர்த்தி, இசையமைப்பாளராக அஜிஸ், எடிட்டராக பிரதீப் ஈ.ராகவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE