மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் நானி, சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'வி'. இது நானியின் 25-வது படமாகும்.
கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாததால், 'வி' திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்த இப்படத்தில், நானி எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடித்தது குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் நானி.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
''ஹீரோ அல்லது வில்லன் என்பதையெல்லாம் நாம் மெல்ல மறந்து வருகிறோம். மெதுவாக இருண்ட கதாபாத்திரங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். முன்பு, கருப்பு வெள்ளையில் திரைப்படங்கள் வந்துகொண்டிருந்தன. அப்போது நல்லவன் கெட்டவன் என்று இருவர் இருப்பார்கள். இப்போது அப்படியெல்லாம் எதுவும் இல்லை.
இப்போது ஹீரோவிடம் சில தவறுகள் இருக்கின்றன. வில்லனிடமும் சில நல்ல குணங்கள் இருக்கின்றன. எனவே, இனி அவ்வாறு பெயரிட்டு நாம் அழைக்க முடியாது. இந்த மாற்றம் மிகவும் தெளிவானதாக இருக்கிறது. முன்பை விட இப்போது அதிக நெகட்டிவ் கதாபாத்திரங்களை விரும்புகிறோம்''.
இவ்வாறு நானி கூறியுள்ளார்.