சுஷாந்த் சிங் மரணத்தில் போதை மருந்து தொடர்பு: 6 பேர் கைது பற்றிய முழு விவரங்கள்

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் போதை மருந்து தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வரும் போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார், இது சம்பந்தமாக ஒரு ஆட்டோ ஓட்டுநர், ஒரு பெரிய உணவக உரிமையாளர் உட்பட 6 பேரைக் கைது செய்துள்ளனர்.

சமீர் வான்கடே தலைமையிலான மும்பை மண்டலக் குழு இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. திங்கட்கிழமை அன்று கைது செய்யப்பட்டவர்கள் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் மேஜிஸ்திரேட் முன்பு ஒப்படைக்கப்படுவார்கள்.

கரஞீத் சிங் ஆனந்த், ட்வைன் ஃபெர்னாண்டஸ், சங்கேத் படேல், அங்குஷ் அன்ரேஜா, சந்தீப் குப்தா மற்றும் அஃப்தாப் ஃபதே அன்சாரி என இந்த ஆறு பேருமே போதை மருந்து கை மாற்றுபவர்கள் என்று போதை மருந்து தடுப்புப் பிரிவின் துணை இயக்குநர் கேபிஎஸ் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

இதில் சிலர் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தியின் சகோதரர் ஷௌவிக் சக்ரபர்த்தி உள்ளிட்ட சிலர் மூலம் சுஷாந்துக்கு போதை மருந்து விற்பனை செய்திருக்கின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையைப் பற்றி போதை மருந்து தடுப்புப் பிரிவோடு, சிபிஐ ஒரு பக்கமும், அமலாக்கத்துறை ஒரு பக்கமும் விசாரித்து வருகிறது.

கைதானவர்களைப் பற்றிய விவரங்கள்

ஆனந்த் - 23 வயதான இவர் மும்பையில் போதை மருந்து விற்பவர். இவருக்கு பாலிவுட்டில் போதை மருந்து விற்கவென்றே ஒரு தனி விநியோகப் பிரிவை வைத்திருக்கிறார். இவரிடமிருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஃபெர்ணாண்டஸ் - . மும்பையில் போதை மருந்து விற்றுக் கொண்டிருந்தவர். ஷௌவிக் சக்ரபரத்தியின் நண்பர். சுஷாந்துக்குத் தேவையான போதை மருந்துகளை விநியோகித்தவர். இன்னும் சில போதை மருந்து விற்பவர்களுடன் இவரை தாதர் மேற்கு பகுதியில் போதை மருந்து தடுப்புப் பிரிவினர் கைது செய்ததோட்டு கிட்டத்தட்ட அரை கிலோ போதைப் பொருளைக் கைப்பற்றியுள்ளனர்.

குப்தா - அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநராக இருந்தாலும் இவரது முதன்மையான வியாபாரம், ஃபெர்ணாண்டஸ் போன்ற போதை மருந்து விற்பனையாளர்களிடம் போதை மருந்துகளை மொத்த அளவில் கொண்டு வந்து சேர்ப்பது.

படேல் - போதை மருந்து விநியோகத்தில் ஆனந்தின் கூட்டாளி. பல்வேறு பிரபலங்களுக்கு இவர் போதை மருந்து கொண்டு போய் கொடுத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. பாலிவுட் - போதை மருந்து தொடர்பு குறித்து இவரை வைத்து இன்னும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

அன்ரேஜா - 29 வயதான இவர் மும்பையில் செல்வந்தர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உணவகம் வைத்திருப்பவர். பல பெரிய இடத்து வாடிக்கையாளர்களுக்குப் போதை மருந்துகளை விற்றிருக்கிறார்.

அன்ரேஜா, தான் விற்கத் தேவையான போதை மருந்துகளை ஆனந்த மற்றும் படேலிடம் வாங்கியிருக்கிறார். ஆனந்த் மற்றும் அனுஜ் கேஷ்வானி ஆகியோருடனும் தொடர்பிலிருப்பவர். இந்த வழக்கில் அனுஜ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். அன்ரேஜாவிடமிருந்து 42 கிராம் போதைப் பொருளும், ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அன்சாரி - குப்தாவுக்காக போதை மருந்துகளை மொத்தமாக வாங்கித் தந்தவர். குப்தா இந்த போதை வஸ்துக்களை தனது குழுவின் மூலம் மேற்கொண்டு விநியோகித்து வந்துள்ளார்.

இந்த வழக்கில் கிரிஸ் கோஸ்டா என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களை போதை மருந்து தடுப்புப் பிரிவினர் கண்காணித்து வருவதாக வெளியான செய்திகளை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE