ஓடிடி வெளியீட்டில் 'நிசப்தம்' உறுதி

By செய்திப்பிரிவு

அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள 'நிசப்தம்' திரைப்படம் ஓடிடி வெளியீட்டை உறுதி செய்துள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது. தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படம், வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாரானது. கரோனா ஊரடங்கினால் இந்தப் படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது.

தயாராகி இருக்கும் பல படங்களை ஓடிடி வெளியீட்டுக்காக, ஓடிடி தளங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் தெலுங்கு திரையுலகிலிருந்து முதல் ஓடிடி வெளியீடாக 'நிசப்தம்' இருக்கும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை படக்குழு மறுத்து வந்தது. ஏனென்றால், தெலுங்கு திரையுலகினர் ஓடிடி வெளியீட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால், 'நிசப்தம்' வெளியீட்டில் சிக்கல் நீடித்தது வந்தது.

சில தினங்களுக்கு முன்பு நானி நடிப்பில் உருவான 'வி' ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 'நிசப்தம்' வெளியீடு தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, ஓடிடி வெளியீடு உறுதி செய்யப்பட்டது.

ஓடிடி தளத்தில் அக்டோபர் 2-ம் தேதி 'நிசப்தம்' வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE