திரையரங்கம் சேரமுடியாத படைப்புகள் ஓடிடி தளத்தில் மீளும் என்று தனது ட்விட்டர் பதிவில் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து திரையரங்குகள் அனைத்துமே மூடப்பட்டது. சுமார் 150 நாட்களை கடந்தும், இப்போது வரை எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்புகள் கூட வெளியாகவில்லை
திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாத காரணத்தால், தயாராகவுள்ள பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகிய இருவருக்கும் மோதல் உருவாகியுள்ளது.
இதனிடையே, திரையரங்க வெளியீட்டில் சிக்கல் உள்ள பல படங்கள் ஓடிடி வெளியீட்டுக்கு முயற்சித்து வருகின்றன. இந்த மாற்றங்கள் தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"திரையரங்கம் மக்கள் ஒன்றுகூடும் கொண்டாட்ட உணர்வின் வெளிப்பாடு. விஞ்ஞான வளர்ச்சியில் சினிமா கருப்பு வெள்ளை ஃபிலிமில் தொடங்கி டிஜிட்டல் என எல்லாமே மாறிவிட்டது. ஆனால் திரையரங்க அனுபவம் மாறவில்லை. அகன்ற திரை வாழும். திரையரங்கம் சேரமுடியாத படைப்புகள் ஓடிடி தளத்தில் மீளும்"
இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்