பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். விசாரணையில், அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் அல்லது கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி உட்பட அவருக்கு நெருக்கமான சிலர் போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் தனியாக வழக்கு பதிவு செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி உள்ளிட்ட 9 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மும்பை, கோவா ஆகிய மாநிலங்களில் சுமார் 7 இடங்களில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், இந்த வழக்குக்கு தேவையான முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.