பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. முதலில் இதனை தற்கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் அல்லது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்கரவர்த்தி, இவரது சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி உள்ளிட்ட சிலர் போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. மேலும், சுஷாந்த் சிங்குக்கு போதைப் பொருட்களை அவர்கள் வழங்கி வந்ததும் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், ரியா சக்கரவர்த்தி, சோவிக் சக்கரவர்த்தி உட்பட 9 பேரை அண்மையில் கைது செய்தனர். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மும்பை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ரியா சக்கரவர்த்தி நேற்று மனு தாக்கல் செய்தார். அதில், “எனக்கும், போதைப் பொருள் கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிகாரிகள் என்னை மிரட்டி வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை மறுத்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், அவருக்கு எதிராக இருந்த ஆதாரங்களை நீதிபதியிடம் சமர்ப்பித்தனர். இதனை ஆய்வு செய்த நீதிபதி, ரியா சக்கரவர்த்தியை வரும் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். சோவிக் உட்பட 8 பேரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.