மீண்டும் இணையும் 'கொம்பன்' கூட்டணி

By செய்திப்பிரிவு

முத்தையா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வெளியான படம் 'கொம்பன்'. முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா, கருணாஸ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சூர்யா- முத்தையா கூட்டணிக்குத் திட்டமிட்டார்கள். ஆனால் அந்தக் கூட்டணி இணையவில்லை. அதற்குப் பிறகு கார்த்தி - முத்தையா மீண்டும் இணைவது எனத் திட்டமிடப்பட்டது. ஆனால், அதுவும் வெவ்வேறு படங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

இறுதியாக, 2டி நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி - முத்தையா கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது. தற்போது 'பொன்னியின் செல்வன்' மற்றும் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் கார்த்தி கவனம் செலுத்தி வருகிறார். அந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, முத்தையா இயக்கத்தில் அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருவதற்குக் கொஞ்ச காலம் ஆகலாம். ஏனென்றால், அந்த இரண்டு படங்களையும் கார்த்தி முடிக்கப் போகும் சமயத்தில் இப்படம் குறித்து அறிவிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE