தனது மகன் ஆரவ், ஊடக வெளிச்சத்திலிருந்து விலகி வாழ விரும்புவதாகவும், தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்க விரும்புவதாகவும் நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார்.
அக்ஷய் குமார், ட்விங்கிள் கண்ணா தம்பதிக்கு 2002-ஆம் ஆண்டு பிறந்தவர் ஆரவ். இந்தத் தம்பதிக்கு நிதாரா என்கிற ஏழு வயது பெண் குழந்தையும் உள்ளது.
டிஸ்கவரி சேனலில் இன்டு தி வைல்ட் வித் பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் பேசியிருக்கும் அக்ஷய் குமார், "என் மகன் மிக வித்தியாசமானவன். என் மகன் என்று யாரிடமும் சொல்ல வேண்டாம் என நினைப்பான். ஊடக வெளிச்சத்திலிருந்து விலகி இருக்க விரும்புகிறான். தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என நினைக்கிறான். அவன் மனநிலையை நான் புரிந்து கொள்கிறேன். எனவே அவன் விருப்பம் என்னவோ அப்படியே இருக்கட்டும்" என்று கூறியுள்ளார்.
தனது அப்பாவின் பண்புகளை தன் மகனிடமும் புகுத்த முயற்சித்ததாக அக்ஷய் குமார் கூறியுள்ளார். "எந்த தந்தை தான் என் வாழ்க்கையில் எனக்கு இருக்கும் ஒரே தாக்கம். அவரது விதிமுறைகளைத் தான் நான் பின்பற்றியுள்ளேன். அவர் சொன்ன அனைத்தையும் கற்றுள்ளேன். என் மகனுக்கு அது கிடைக்கும் என நம்புகிறேன்" என்கிறார் அக்ஷய் குமார்.
டிஸ்கவரி சேனலில் இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 11ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. முன்னதாக இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- பிடிஐ