கரோனா விதிகளைப் புறக்கணிக்கும் மக்களைப் பார்க்கும்போது பயமாக உள்ளது என்று ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் என்பது சில மாநிலங்களைத் தவிர இதர மாநிலங்களில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஆனால், பொருளாதார நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் திரையரங்குகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் தவிர்த்து மற்ற அனைத்தும் செயல்பட அனுமதியளித்துள்ளது. இன்று (செப்டம்பர் 7) முதல் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டன.
ஞாயிறு முழு ஊரடங்கையும் தமிழக அரசு தளர்த்திவிட்டதால், பல்வேறு விளையாட்டு திடல்கள் மற்றும் இறைச்சி கூடங்கள் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானது.
இது தொடர்பாக ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"கரோனா கிருமி சென்றுவிடவில்லை. நாம் விழிப்புடன், முககவசம் அணிந்து கொள்ள வேண்டும். மூக்கையும், வாயையும் மறைத்துக் கொண்டு, சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். இதைப் புறக்கணிக்கும் மக்களைப் பார்க்கும்போது திகைப்பாக, பயமாக உள்ளது. நாம் எப்போது கற்றுக் கொள்வோமோ"
இவ்வாறு ராதிகா தெரிவித்துள்ளார்.