பிரபாஸை இயக்குவது எனது கனவு என்று 'ராதே ஷ்யாம்' இயக்குநர் ராதா கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷ்யாம்' வெளியாகவுள்ளது.
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இசையமைப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதுவரை 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இதனிடையே, இயக்குநர் ராதா கிருஷ்ணா தனது ட்விட்டர் பதிவில் "'ராதே ஷ்யாம்' தொடர்பான கேள்விகளைக் கேளுங்கள். அதில் சிறந்த 5 கேள்விகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பதில் சொல்கிறேன்" என்று தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பலரும் அந்த ட்வீட்டிற்கு பதிலாகக் கேள்விகளை வெளியிட்டனர்.
அதில் குவிந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ராதா கிருஷ்ணா கூறியிருப்பதாவது:
"1. நம் டார்லிங் (பிரபாஸை) இயக்குவது எனது கனவு. படப்பிடிப்பில் அவருடன் பணியாற்றுவது அதிக மகிழ்ச்சியைத் தந்தது.
2.அடுத்த வருடம் கண்டிப்பாக உங்களைத் திரையரங்கில் சந்திக்கிறோம்.
3. 'ராதே ஷ்யாம்' படத்தின் மிகப்பெரிய சொத்து பிரபாஸின் தோற்றமாகத் தான் இருக்கும்.
4. ஆம், பூஜா ஹெக்டேவைத்தான் தான் 'ராதே ஷ்யாம்' படத்தில் முதலில் நடிக்க வைக்க யோசித்தது
5. மோஷன் போஸ்டர், டீஸர், ட்ரெய்லர் எல்லாம் வரும். தயவு செய்து அமைதியாக இருங்கள். உங்களைச் சரியான நேரத்தில் ஆச்சரியப்படுத்துகிறோம்"
இவ்வாறு இயக்குநர் ராதா கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.