அர்ஜுன் கபூரைத் தொடர்ந்து மலைகா அரோராவுக்கும் கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூரைத் தொடர்ந்து மலைகா அரோராவுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக அர்ஜுன் கபூர் தனது இன்ஸ்டாகிரம பக்கத்தில், "எனக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பது எனது கடமை. நான் நன்றாக இருக்கிறேன், எனக்கு அறிகுறிகள் இல்லை.

மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டேன். வீட்டுத் தனிமையில் இருக்கப் போகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. வரும் நாட்களில் எனது உடல்நலம் குறித்துத் தொடர்ந்து பகிர்கிறேன். இதற்கு முன் யாரும் பார்த்திராத ஒரு காலகட்டம் இது. எனக்கு மனிதத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. நான் இந்த தொற்றிலிருந்து மீண்டு வருவேன்" என்று பகிர்ந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்து வந்தனர். அவருக்குத் தொற்று உறுதியான சிறிது நேரத்தில், அவருடைய காதலி மலைகா அரோராவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இதனிடையே தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மலைகா அரோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"இன்று எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நான் நலமுடன் இருக்கிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. மேலும் என்னுடைய மருத்துவர் மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி"

இவ்வாறு மலைகா அரோரா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE