சைஃப் அலி கான் ராவணனா?; ராணா தான் பொருத்தமாக இருப்பார் - சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சாடல்

By ஐஏஎன்எஸ்

'தன்ஹாஜி' இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 18 காலை அறிவிக்கப்பட்டது. பூஷண் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.

இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது. 'ஆதிபுருஷ்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் மூலமாக 'ராமாயணம்' கதையில் ஒரு பகுதியைப் படமாக்குகிறார்கள் என்பது தெளிவானது.

இப்படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். எனவே ராவணன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போவது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இந்த சூழலில் நேற்று ராவணன் கதாபாத்திரல் நடிக்க பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தனர். இது இணையத்தில் பெரும் வைரலானது.

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு வாரிசு நடிகர்கள் நெட்டிசன்களால் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் பழம்பெரும் நடிகை ஷர்மிளா தாகூரின் மகனான சைஃப் அலி கான் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

அதுமட்டுமின்றி தனது சகோதரி சாரா அலி கான் சுஷாந்த்தை காதலித்த போது சாராவை சுஷாந்த்தை விட்டு விலகுமாறு சைஃப் அலி கான் நிர்பந்தம் செய்ததாகவும் நெட்டிசன்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

பலரும் ‘பாகுபலி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த ராணாவே ராவணனாக நடிக்க பொருத்தமாக இருப்பார் என்றும், சைஃப் அலி கான் ராவணன் கதாபாத்திரத்துக்கு ஏற்றவர் அல்ல என்றும் படக்குழுவினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

'சாஹோ' மற்றும் 'ராதே ஷ்யாம்' படங்களுக்கு பிறகு பூஷண் குமார் -பிரபாஸ் இணையும் மூன்றாவது படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2021-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022-ம் ஆண்டு பிரம்மாண்ட முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE