'குதா ஹாஃபிஸ்' இரண்டாம் பாகம் உருவாகிறது: திரையரங்கில் வெளியிடத் திட்டம்

சமீபத்தில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான 'குதா ஹாஃபிஸ்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதில் மீண்டும் வித்யூத் ஜம்வாலே நாயகனாக நடிக்கவுள்ளார். 'குதா ஹாஃபிஸ் சாப்டர் 2' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டாவது பாகம் பெரிய திரை வெளியீட்டுக்காகத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிஜத்தில் நடந்த சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் 'குதா ஹாஃபிஸ்'. இந்தியாவில் புதிதாகத் திருமணம் ஆன சமீர்- நர்கீஸ் தம்பதிகள் வெளிநாடு சென்று வேலை செய்ய முடிவெடுக்கின்றனர். அயல்நாட்டில் நர்கீஸ் மர்மமான முறையில் காணாமல் போகிறார். சமீர் தன் மனைவியைக் காப்பாற்றுவதே படத்தின் கதை.

கரோனா நெருக்கடி காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் 'குதா ஹாஃபிஸ்' நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்துள்ளனர்.

"சமீர் அவர் மனைவியை மீட்டது முழுமையான முடிவாக இல்லை. தனக்கு நடந்த விஷயங்களுக்குப் பிறகு வெற்றிகரமாக இந்தச் சமூகத்தில் வாழ்வதுதான் இந்தக் காதல் கதையின் உண்மையான ஆரம்பம். இரண்டாம் பாகத்தில் அதைத்தான் விவரிக்க உள்ளோம்" என வித்யூத் கூறியுள்ளார்.

படத்தின் இயக்குநர் ஃபரூக் கபீர் பேசுகையில், "நான் இந்தக் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், ரசிகர்கள் முதல் பாகத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதைப் பார்க்கக் காத்திருந்தேன். இரண்டாம் பாகம் இன்னும் தீவிரமாக, மனப்பூர்வமான காதல் கதையாக இருக்கும். தங்களுக்கு நடந்த விஷயங்களைப் புரிந்து, அதோடு வாழப் பழகிக் கொள்ளும் முதன்மை கதாபாத்திரங்களைப் பற்றி இது சொல்லும்.

உண்மையில் அவர்களுக்கான அக்னி பரீட்சையாக இருக்கும். ஒரு கதைசொல்லியாக எனக்கு என் மீது இருக்கும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியுமா என்று பார்க்கிறேன். மேலும் முதல் பாகத்துக்கு இவ்வளவு நல்ல வரவேற்பைத் தந்திருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யப் பார்க்கிறேன். ஆனால், இது திரை வரிசையாக இருக்கப் போவதில்லை. இரண்டாம் பாகம்தான் கடைசிப் படம். இன்னும் அதிக ஆக்‌ஷன், அதிக அன்பைப் பெரிய திரையில் பார்க்கலாம்" என்றார்.

2021-ம் ஆண்டு முதல் பாதியில் 'குதா ஹாஃபிஸ் சாப்டர் 2' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE