சொல்வதைப் புரிந்து பதில் சொல்லும் நிலையில் எஸ்பிபி இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று (செப்டம்பர் 3) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கோவிட்-19 தொற்று காரணமாக எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் இருந்து வருகிறார்.
அவர் தற்போது சீரான நிலையில் உள்ளார். அவர் விழிப்புடன், சொல்வதைப் புரிந்து பதில் சொல்லும் நிலையில், தொடர்ந்து நல்ல மருத்துவ ரீதியிலான முன்னேற்றத்தைக் காட்டி வருகிறார். எங்களது மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து அவரைக் கண்காணித்து வருகிறது".
இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின் மூலம் எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பது உறுதியாகியுள்ளது