4-வது நாளாக சீரான நிலையில் எஸ்பிபி; விரைவில் நல்ல செய்தி: சரண் தகவல்

4-வது நாளாக சீரான நிலையில் அப்பா இருப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை அறிக்கை தவிர்த்து அவருடைய மகன் எஸ்பிபி சரணும் அவ்வப்போது அப்பாவின் நிலை குறித்து ட்வீட்களும், வீடியோக்களும் வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்று (செப்டம்பர் 3) எஸ்பிபி சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

"அனைவருக்கும் வணக்கம். நான்காவது நாளாக தொடர்ந்து அப்பா சீரான நிலையிலிருந்து வருகிறார். இந்த வார இறுதியில் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம். கடவுளின் ஆசீர்வாதத்தோடும், உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளோடும், திங்கட்கிழமைக்குள் கண்டிப்பாக ஒரு நல்ல முன்னேற்றம் இருக்கும் என நான் நம்புகிறேன். அதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். அனைவருக்கும் நன்றி".

இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE