கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளராக மாறவுள்ளதாக வெளியான தகவலுக்கு, அவரது தரப்பு மறுப்பு தெரிவித்தது.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினியுடன் 'அண்ணாத்த', செல்வராகவனுடன் 'சாணிக் காயிதம்' ஆகிய படங்களிலும் தெலுங்கில் 'மிஸ் இந்தியா', 'ரங் தே' மற்றும் மகேஷ் பாபுவுடன் 'சர்காரு வாரி பாட்டா' ஆகிய படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்தப் படங்களுக்குப் பிறகு நடிப்பதற்காக, பல்வேறு இயக்குநர்களிடம் கதையும் கேட்டு வருகிறார். இதனிடையே, வெப் சீரிஸ் கதையொன்றைக் கேட்டதாகவும் அது மிகவும் பிடித்துவிடவே தானே தயாரித்து நடிக்க கீர்த்தி சுரேஷ் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பில் விசாரித்த போது, "கீர்த்தி சுரேஷின் அப்பாவே தயாரிப்பாளராக இருந்தவர் தான். இப்போதைக்கு பல படங்களில் நடித்து வருவதால், தயாரிப்பில் கவனம் செலுத்தும் அளவுக்கு அவருக்கு நேரமில்லை. இப்போதைக்கு கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளராக மாறுவதற்கு வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்கள்.