தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 8 பேர் உயிரிழப்பு: ஆந்திரா, தெலங்கானாவில் சோகம்

By என்.மகேஷ்குமார்

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணின் பிறந்த நாளை நேற்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அவரது ரசிகர்கள், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் வெகு விமரிசையாக கொண்டாடினர்.

சித்தூர் மாவட்டம், குப்பம் தொகுதியில் சாந்திபுரம் ஏழாவது மைல் பகுதியில் அவரது ரசிகர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் பேனர் கட்டினர். அப்போது பேனரின் மேலிருந்து சரிந்து விழுந்து கடபல்லி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரா (31), சோமசேகர் (29), அருணாசலம் (20) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் நகரை சேர்ந்த ரசிகர்கள் ராகேஷ், ரோஹித், ஷபீர், சந்து மற்றும் பவன் என்ற 5 நண்பர்கள், காரில் சென்று நடிகர் பவன் கல்யாணின் பிறந்த நாளை நண்பர்களுடன் நள்ளிரவு கொண்டாடினர். பின்னர் இரவு வீடு திரும்பும் போது, வசர கொண்டா எனும் இடத்தில் எதிரே வந்த லாரி இவர்களின் கார் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர்.

தனது ரசிகர்கள் இறந்த செய்தியை அறிந்த பவன் கல்யாண், அவர்களின் குடும்பத்தாருக்கு இது ஈடு இணையில்லா இழப்பு என்றும், அவர்களது ஆன்மா சாந்தி அடைய வேண்டுமெனவும், தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் ஜன சேனா கட்சி சார்பில் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE