'தன்ஹாஜி' இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 18 காலை அறிவிக்கப்பட்டது. பூஷண் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.
இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது. 'ஆதிபுருஷ்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் மூலமாக 'ராமாயணம்' கதையில் ஒரு பகுதியைப் படமாக்குகிறார்கள் என்பது தெளிவானது.
'சாஹோ' மற்றும் 'ராதே ஷ்யாம்' படங்களுக்கு பிறகு பூஷண் குமார் -பிரபாஸ் இணையும் மூன்றாவது படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2021-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022-ம் ஆண்டு பிரம்மாண்ட முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். எனவே ராவணன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போவது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இந்நிலையில் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தனர். அதன்படி 'ஆதிபுருஷ்' திரைப்படத்தில் ராவணனாக பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.